ஜனவரி 15, 2021
எங்கள் சமீபத்திய புதுப்பிப்பு தொடர்பாக மிக அதிக அளவில் குழப்பம் அடைவதாக நிறைய பயனர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் தவறாக உலா வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இது தொடர்பான எங்கள் அடிப்படை நோக்கங்களையும் தகவல்களையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.
நண்பர்களிடமும் குடும்பத்தினருடனும் நீங்கள் பகிரும் யாவும் உங்களுக்கிடையில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற யோசனையில் உருவாக்கப்பட்டதே WhatsApp செயலியாகும். அதாவது, உங்களுக்கிடையிலான தனிப்பட்ட உரையாடல்களை முழு மறையாக்கத்துடன் எப்போதும் பாதுகாப்போம். இதன்மூலம் WhatsApp அல்லது Facebook-ஆல் கூட இந்தத் தனிப்பட்ட செய்திகளைப் பார்க்க முடியாது. இதன் காரணமாகவே, ஒருவர் யாருக்கெல்லாம் செய்தி அனுப்புகிறார், யாரையெல்லாம் அழைக்கிறார் என்கிற பதிவுகளை நாங்கள் வைத்திருப்பதில்லை. நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவலைக் கூட எங்களால் பார்க்க முடியாது, உங்கள் தொடர்புகளை Facebook உடன் நாங்கள் பகிர்வது கிடையாது.
இந்தப் புதுப்பிப்பின் வாயிலாக, அதில் எதுவுமே மாறப்போவதில்லை. அதற்குப் பதிலாக, WhatsApp இல் ஒரு பிசினஸுக்குச் செய்தி அனுப்புவது தொடர்பான புதிய விருப்பத்தேர்வுகள் மக்களுக்கு வழங்கப்படுவது, மேலும் தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் ஆகியவை தொடர்பான கூடுதல் வெளிப்படைத்தன்மை குறித்த தகவல்களும் இந்தப் புதுப்பிப்பில் இடம்பெற்றுள்ளன. WhatsApp இல் இன்றளவில் அனைவருமே ஒரு பிசினஸிடம் ஷாப்பிங் செய்வதில்லை என்றாலும், எதிர்காலத்தில் அதிகமானோர் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தச் சேவைகள் குறித்த தகவல்களை மக்கள் தெரிந்து வைத்திருப்பது முக்கியம் எனவும் நாங்கள் எண்ணுகிறோம். இந்தப் புதுப்பிப்பின் வாயிலாக, Facebook உடன் தரவைப் பகிரும் எங்களது திறன் முன்பிருந்ததைப் போன்றே இருக்கிறது.
விதிமுறைகளை மக்கள் படித்து ஏற்றுக் கொள்வதற்கு வழங்கப்படும் தேதியில் தளர்வுகளை உருவாக்கியுள்ளோம். பிப்ரவரி 8ஆம் தேதியன்று ஒருவரது கணக்கும் இடைநிறுத்தப்படாது அல்லது நீக்கப்படாது. WhatsApp-இல் தனியுரிமையும் பாதுகாப்பும் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்த தவறான தகவல் குறித்து மேலும் தெளிவான விவரங்களை வழங்கி மக்களிடையே உள்ள குழப்பத்தை நீக்கப் போகிறோம். அதன் பிறகு, மக்கள் இந்தக் கொள்கையைப் படித்துப் புரிந்துகொள்வதற்குப் போதுமான கால அவகாசத்தை வழங்குவோம். புதிய பிசினஸ் விருப்பத்தேர்வுகள் மே 15ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கு முழு மறையாக்கத்தை வழங்க WhatsApp பெரும் முயற்சி எடுத்துள்ளது. இந்தப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை இப்போதும், எப்போதும் பராமரிப்பதில் உறுதி பூண்டுள்ளோம். எங்களைத் தொடர்புகொண்ட அனைவருக்கும், உண்மை நிலையை விளக்கி வதந்திகள் பரவாமல் தடுத்த அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றி. தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதற்கான சிறந்த கருவியாக WhatsApp-ஐ மாற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்.